மின்சார வாகன ஓட்டுனர்கள் எளிதாக சார்ஜ் செய்யக்கூடிய வசதியை அறிமுகம் செய்த அஜ்மான் காவல் நிலையம் !
மின்சார வாகனங்களை இயக்கம் வாகன ஓட்டுனர்கள் தங்களுடைய வாகனங்களுக்கு அஜ்மானில் உள்ள அல் நுவைமியா காவல் நிலையத்தில் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய வசதியை அஜ்மான் காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வசதி பசுமை வளர்ச்சிக்கான அமீரகத்தின் முயற்சிகள் மற்றும் பசுமை பொருளாதாரத்தை நோக்கி செல்லும் அஜ்மான் 2021 வியூகத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. இது பற்றி அல் நுவைமியா காவல் நிலையத்தின் தலைவரான லெப்டினன்ட் கர்னல் முகமது அப்துல்லா அபு ஷிஹாப் அவர்கள் கூறும்போது “மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் சாதனத்தை வழங்குவதற்கான இந்த முயற்சி ஒரு மணிநேர முயற்சியின் (One Hour Try) ஒரு பகுதியாகும்”.
மேலும், எலக்ட்ரிக் கார் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கான சார்ஜிங் சாதனத்தை, காவல் நிலைய வளாகத்தில் அதற்கென்று அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.
இப்புதிய முயற்சியானது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே நேரத்தில் மின்சார வாகனங்களை பயன்படுத்தவும், தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் குடியிருப்பாளர்களை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

