டிக்டாக் மீதான தடையை நீக்கியது பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசு டிக்டாக் மீதான தடையை நீக்கியது. டிக்டாக் எனப்படும் செயலி மூலம் ஆட்டம், பாட்டம், பேச்சு, வசனம், நடிப்பு என மக்கள் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். எனினும் இந்த செயலியில் ஆபாச வீடியோக்களும் நிறைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
மேலும் இந்த செயலி பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதேபோல் இந்த செயலியில் ஒழுக்கக்கேடான வீடியோக்களை தடுக்க தவறியதால் பாகிஸ்தானும் 10 நாட்களுக்கு முன்பு டிக்டாக்கிற்கு தடை விதித்தது.
இதையடுத்து தற்போது அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து பாகிஸ்தான் அரசு கூறுகையில் ஆபாசத்தையும் ஒழுக்கக்கேட்டையும் பரப்புவதில் ஈடுபடும் அனைத்து கணக்குகளும் முடக்கப்படும் என டிக்டாக் நிர்வாகம் உறுதியளித்ததாக தெரிவித்தது.
அதன் பிறகு இந்த செயலி மீதான தடை நீக்கப்படுகிறது என பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தானில் சுமார் 20 மில்லியன் டிக்டாக் பயனாளிகள் உள்ளனர். மேலும் இந்த செயலிதான் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டது.

