அஜ்மானில் இசை நிகழ்ச்சிகளுக்குத் தடை..சினிமா திரையரங்குகள், ஜிம்கள், பூங்காக்கள் மற்றும் உணவகங்களில் 50 திறனில் மட்டும் இயங்க அனுமதி !
அஜ்மான் முழுவதும் கொரோனாவின் அச்சத்தால் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கான வழிமுறைகளை உடனே அமல்படுத்த அரசு மேற்கொண்டுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தடுப்பு நடவடிக்கைகளின் கீழ், இசை நிகழ்ச்சிகள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முந்தைய உத்தரவில் திருமண நிகழ்ச்சிகளில் 50 பங்கேற்பாளர்கள் வரை அனுமதித்திருந்த நிலையில், தற்போது திருமணங்களில் கலந்து கொள்ள அதிகபட்சம் 10 குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் அனுமதி என்றும் அதே நேரத்தில் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள 20 உறுப்பினர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா திரையரங்குகள், ஜிம்கள், பூங்காக்கள் மற்றும் கடற்கரையோர ஹோட்டல்களில் இயக்க திறனை 50 சதவீதமாகக் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளில் அனைத்து உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் நள்ளிரவுக்குள் மூட உத்தரவிட்ட நிலையில் இவற்றை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.