அபுதாபி IPL 2020: ராஜஸ்தானை வென்று மும்பை அணி அடுத்த வெற்றி !

அபுதாபி: IPL 2020 மும்பை – ராஜஸ்தான்
2020 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே ஆன போட்டி அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மும்பை அணி 20 ஓவர்களில் 193 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
மும்பை பேட்டிங்:
மும்பை அணியின் துவக்க வீரர்களாக டி காக், ரோஹித் சர்மா களமிறங்கினர். டி காக் இந்தப் போட்டியில் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். ரோஹித் சர்மா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இஷான் கிஷன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் நிலைத்து நின்று ஆடினார். அதிரடியாக ஆடினாலும் தனது விக்கெட்டை தற்காத்துக் கொண்டார்.
கிரண் பொல்லார்டு இடத்தில் பேட்டிங் செய்ய வந்த க்ருனால் பாண்டியா நிதான ஆட்டம் ஆடி 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். சூர்யகுமார் யாதவ் கடைசி வரை களத்தில் நின்று 79 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்டியா 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்
மும்பை அணி 20 ஓவர்களில் 193 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் இழந்து இருந்தது.
ராஜஸ்தான் பேட்டிங்:
அடுத்து 194 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணிக்கு ட்ரென்ட் போல்ட் – பும்ரா வேகப் பந்துவீச்சு ஜோடி பெரும் அதிர்ச்சி அளித்தது. முதல் 3 ஓவர்களில் போல்ட் 2, பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினர். ஜெய்ஸ்வால் 0, ஸ்மித் 6, சஞ்சு சாம்சன் 0 என வரிசையாக ஆட்டமிழந்தனர்.
அடுத்து லோம்ரார் 11, டாம் கர்ரன் 15, ராகுல் திவேதியா 5 ரன்களில் ஆட்டமிழந்தனர், பட்லர் மட்டுமே தனியாக போராடி 44 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மும்பை அபார வெற்றி:
ஆர்ச்சர் அதிரடியாக 11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தாலும் அந்த அணி தோல்வியை நோக்கி சென்றது. 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.