குவைத் நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று – கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு – வெளிநாட்டவர்கள் நுழையத் தடை !!
குவைத் நாட்டில் கொரோனா தொற்றுநோயின் எண்ணிக்கையில் புதிய உயர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க குவைத் அரசு புதன்கிழமை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
ஒரு அறிக்கையில், குவைத் அமைச்சரவையானது ஜிம்கள் மற்றும் சலூன்களை மூட உத்தரவிட்டதாக அறிவித்ததுடன், பிப்ரவரி 7 முதல் ஒரு மாதத்திற்கு ஒவ்வொரு நாளும் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை செயல்படுவதை நிறுத்துமாறு பிற வணிக நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இவற்றில் மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பிற உணவு விநியோக கடைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குவைத் நாட்டின் துணை பிரதமரும் அமைச்சரவை விவகாரத்துறை அமைச்சருமான அனஸ் அல்-சாலெஹ் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து சுகாதார கிளப்புகள், ரிசார்ட்ஸ், அழகு நிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் ஆகியவற்றை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
கூடுதலாக, அனைத்து உணவக வரவேற்பு மண்டபங்களும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், வீட்டு விநியோக சேவைகள் தடைசெய்யப்பட்ட நேரத்தில் செயல்பட அனுமதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கொண்டாட்ட அரங்குகள், கூடாரங்கள் மற்றும் இந்த மாத தேசிய தின கொண்டாட்டங்களுக்கு கூட தடைசெய்யப்பட்டுள்ளன.
மேலும், அனைத்து விளையாட்டு கூட்டமைப்புகளும் அனைத்து முறையான மற்றும் நட்பு விளையாட்டு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்படாத அரசு ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க சிவில் சர்வீஸ் கமிஷனுக்கு அறிவுறுத்தியதாக அமைச்சரவை குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் வெளிநாட்டவர்கள் குவைத் நாட்டிற்குள் நுழைய இரண்டு வாரங்களுக்கு தடை விதிப்பதாக குவைத் அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் வீட்டுப் பணியாளர்களுடன் வருபவர்களுக்கு நுழைவுத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
மேலும், நாட்டிற்கு வருபவர்கள் அனைவரும் தங்கள் சொந்த செலவில் ஒரு வாரம் கட்டாய நிறுவன தனிமைப்படுத்தலுக்கும், அடுத்த ஒரு வாரம் வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கும் உட்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.