ஜப்பானில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….சுனாமி எச்சரிக்கை விடுப்பு !!
டோக்கியோ: வடகிழக்கு ஜப்பானில் 7.2 ரிக்டர் அளவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பானின் மியாகி மண்டலத்திற்கு அருகே அந்நாட்டு நேரப்படி மாலை 6:09 மணிக்கு 7.2 என்கிற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், நிலப்பகுதியை ஒட்டிய பசிபிக் பெருங்கடலின் கீழ் 73 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மனியைச் சேர்ந்த புவியியல் ஆய்வுத்துறை முதற்கட்டமாக அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டிருக்கிறது. மேலும், ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையமும் நிலநடுக்கம் ஏற்பட்டதை உறுதி செய்தது. மக்கள் அதிர்ச்சி அடைந்து கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலைகளில் திரண்டனர். எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் வழக்கத்தைவிட ஒரு மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்பக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இஷினோமகி, 57 கி.மீ தூரத்தில் உள்ள யமோட்டோ , 68 கி.மீ தூரத்தில் உள்ள ஒஃபுனாடோ , 75 கி.மீ தூரத்தில் உள்ள ஷியோகாமா, 80 கி.மீ தூரத்தில் உள்ள ஃபுருகாவா, 81 கி.மீ தூரத்தில் உள்ள இச்சினோசெக்கி , 90 கி.மீ தூரத்தில் உள்ள செண்டாய், 98 கி.மீ தூரத்தில் உள்ள மிசுசாவா ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.